ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலை கட்டுமான பணி நடப்பதை படத்தில் காணலாம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணி தொடங்கியது

Published On 2018-06-30 06:40 GMT   |   Update On 2018-06-30 06:40 GMT
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலை கட்டுமான பணி தொடங்கியது.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்து கோவில்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

இதைதொடர்ந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது தரை மட்டத்தில் இருந்து 103 அடி உயரம் கொண்டதாக இந்த ராஜகோபுரம் அமைய உள்ளது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்று நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து 4-ம் நிலை கட்டுவதற்காக சாரம் அமைக்கும் பணியும், கீழே இருந்து கட்டுமான பொருட்களை மேலே எடுத்து செல்ல வசதியாக புதிதாக லிப்ட் அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று நான்காம் நிலை கட்டுவதற்கான பணி தொடங்கியது.

கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News