ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2018-01-22 06:54 GMT   |   Update On 2018-01-22 06:54 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான தை உத்திர வருசாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

காலை 7 மணிக்கு கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றைய தினம் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடப்பதால் மாலையில் ராக்கால அபிஷேகம் கிடையாது. மூலவருக்கு புஷ்பாஞ்சலிக்கு தேவையான மணமுள்ள பூக்களை (கேந்தி பூக்களை தவிர) பக்தர்கள் வழங்கலாம் என்று கோவில் இணை ஆணையர் பாரதி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News