ஆன்மிகம்
பூலோகம் வந்த பிரம்மன் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தான். அப்போது அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினார்.
சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகளைக் கொண்டிருந்தான் பிரம்மன். அதனால் தானும் ஈசனுக்கு நிகரானவனே என எண்ணி கர்வம் கொண்டான். இதையறிந்த ஈசன், பிரம்மதேவனின் கர்வத்தை அழிக்கும் வகையில், தம்மில் இருந்து பைரவரை தோற்றுவித்தான். பைரவரோ, பிரம்ம தேவனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார்.
தலையை இழந்த பிரம்மதேவன், தன்னுடைய படைப்புத் தொழிலையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிகளின் ஆலோசனைப்படி, பிரம்மன் பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தான். அப்போது அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினார். பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாக திருக்காட்சி கொடுத்த ஈசன், பிரம்மனின் தவறை மன்னித்து, மீண்டும் அவருக்கு படைப்புத் தொழிலை வழங்கினார்.
கபாலீ என்பது, ஈசனின் பைரவ வடிவத்தையே குறிக்கும். பைரவரை வழிபடுபவர்களுக்கு, கபாலிகர்கள் என்றே பெயர். மயிலாப்பூரில் வீற்றிருக்கும் ஈசன், கபாலீஸ்வரர் ஆனதால், இத்தல ஈசன் பைரவ சொரூபமாக வணங்கப்படுகிறார். கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், அனைத்து செல்வங்களும் நம்மை வந்தடையும்.