ஆன்மிகம்
கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியதை படத்தில் காணலாம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2017-11-24 04:45 GMT   |   Update On 2017-11-24 04:45 GMT
கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 3-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

இதற்காக சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று காலை நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகூர்த்தக்காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News