ஆன்மிகம்
சபரிமலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

சபரிமலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு

Published On 2017-11-22 08:53 GMT   |   Update On 2017-11-22 08:53 GMT
சபரிமலையில் சாமியை தரிசனம் செய்ய 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருப்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேவசம் போர்டு தலைவர் கூறினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருவதையொட்டி நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் குவிந்திருப்பதால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியது உள்ளது.

இந்த நிலையில் சபரிமலையில் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், பத்மகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கடந்த ஆண்டுகளை விட இந்த சீசனில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் 4 மணி முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்து நின்று அய்யப்பனை தரிசனம் செய்யும் நிலை உள்ளது. எனவே பக்தர்கள் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது 30 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு உள்ளது. அரவணை விற்பனை வருவாயும் அதிகரித்துள்ளது.

சபரிமலையில் சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் உணவு பொருட்களை விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழல், தூய்மையை பாதுகாக்க சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கும்போது, தங்களது ஆடைகள், பொருட் களை ஆற்றில் விட்டு செல்கிறார்கள். இவ்வாறு விட்டு செல்வது புண்ணியம் என்று கருதுகிறார்கள். ஆடைகளையும், பொருட்களையும் பம்பை ஆற்றில் போட்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News