ஆன்மிகம்

குணசீலம் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரமோற்சவம் 23-ந் தேதி தொடங்குகிறது

Published On 2017-09-20 03:15 GMT   |   Update On 2017-09-20 03:15 GMT
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், குணசீல மகிரிஷியின் தவத்தை மெச்சி பெருமாள் பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் லட்சுமியை தாங்கி செங்கோல் ஏந்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து 48 நாட்கள் தங்கியிருந்து வணங்கினால் பாதிப்பு நீங்கி தெளிவடைவார்கள் என்றும், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

தென் திருப்பதி என அழைக்கப்படும் இத்தலத்தில் குணசீல மகிரிஷிக்கு காட்சியளித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில். இதனை அடிப்படையாக கொண்டு இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் வருகிற 23-ந் தேதி(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 22-ந் தேதி காலை பகவதனுக்ரஹம், புண்யாக வாசனம், மிருத்ஸங்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன. 23-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடிக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், தங்க கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றன. 29-ந் தேதி மாலை 6½ மணியளவில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9½ மணிக்கு புஷ்பக விமானத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

அக்டோபர் 1-ந் தேதி காலை 5½ மணிக்கு பெருமாள் நாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30 மணியளவில் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

2-ந் தேதி ஸப்தாவரணமும், 3-ந் தேதி ஆடும் பல்லக்கும் நடக்கின்றன. இந்தாண்டு சுவாமி புறப்பாடு நடைபெறும் வாகனங்களுக்கு தாமிரதகடு போர்த்தி தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் தங்கமயமான வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News