ஆன்மிகம்
பகவதி அம்மன் கோவில் ஆடி களப பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் கலந்து கொண்டபோது எடுத்தபடம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது

Published On 2017-08-01 03:25 GMT   |   Update On 2017-08-01 03:25 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை தொடங்கியது.. இந்த களப பூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடி களப பூஜையும் ஒன்று. இந்த களப பூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி கலச பிறையில் வைத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ பூஜை செய்தார். அதன்பிறகு களபம் நிரப்பப்பட்ட அந்த தங்கக்குடம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேகத்தை கோவில் தந்திரி தலைமையில் மேல்சாந்திகள் மற்றும் கீழ்சாந்திகள் நடத்தினர்.

இந்த களப பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பல வாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டார். களப பூஜை முடிந்த பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட களபம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின்னர், அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக்கல் மூக்குத்தி, வைரக்கிரீடம் மற்றும் தங்க அங்கி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு பலவகை மலர்களால் புஷ்பாபிஷேகம், அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி, தொடர்ந்து அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடந்தது.

இதேபோல இந்த களப பூஜை வருகிற 11-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன சுசீந்திரம் கிளை மடஆய்வாளர் ஆறுமுகம், கன்னியாகுமரி பக்தர்கள் சங்க செயலாளர் முருகன், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News