ஆன்மிகம்
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-07-23 03:34 GMT   |   Update On 2017-07-23 03:34 GMT
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதன் மூலம் தமிழகத்திலேயே சுயம்பு வடிவில் சனீஸ்வரர் உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை குச்சனூர் சனீஸ்வரர் கோவில் பெற்றுள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சனீஸ்வரரின் வாகனமான காக்கை சகுனம் பார்க்கப்பட்டது.

சகுனம் கிடைத்ததும், காக்கை உருவம் வரையப்பட்ட கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் கோவில் வளாகத்தில் உப்பு, எள் தீபம் ஏற்றியும், காக்கை பொம்மையை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
Tags:    

Similar News