ஆன்மிகம்
ஊஞ்சலில் அங்காளம்மன் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2017-05-27 04:10 GMT   |   Update On 2017-05-27 04:10 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி வைகாசி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் உள்பிரகாரத்தில் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11.20 மணிக்கு உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நிறைவு பெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News