ஆன்மிகம்
திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டண தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2017-02-20 03:03 GMT   |   Update On 2017-02-20 03:03 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. அண்ணா மலையாரை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கமான நாட்களை விட அதிகமாக காணப்படும்.

மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். சித்திரை பவுர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து 14 கிலோமீட்டர் நடந்து மலையை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

விடுமுறை தினமான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 6-ந் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின் போதும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் சாமி தரிசனம் செய்யாத பொதுமக்கள், பக்தர்கள் பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர். இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. காலை முதலே பொதுதரிசனம், கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-30 மணிவரை சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் கட்டண தரிசனம் வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து வரிசையாக சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல் பொதுவழியிலும் பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News