ஆன்மிகம்

வரப்பட்டியில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

Published On 2016-11-30 06:24 GMT   |   Update On 2016-11-30 06:24 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வரப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வினோத வழிபாடு நடத்தினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வரப்பட்டியில் ஐயப்ப பக்தர்களின் 7-ம் ஆண்டு ஆழி பூஜை விழாவையொட்டி மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டி இந்த பகுதியை சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளை தேர்வு செய்தனர். பின்னர் அவர்களுக்கு மஞ்சள் உடை அணிவித்து, கையில் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

ஐயப்ப பக்தர்களுடன் விரதத்தை தொடங்கிய சிறுமிகளை 7 சப்த கன்னிமார்களாக பாவித்து அவர்களை கோவிலில் தங்க வைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலையில் காளியம்மன் கோவிலில் இருந்து கரகம் பாவித்து எடுத்து வரப்பட்டது. இதையொட்டி 7 கன்னிமார்களும் நெய்விளக்கு ஏந்தி ஊர்வலமாக ஐயப்பன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலை ஆழி (தீ) வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 7 கன்னிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் பூக்குழியை சுற்றி வந்தவுடன், ஐயப்ப பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினார்கள். இதனையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினார்கள்.

இந்த வினோத நிகழ்ச்சி மற்றும் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை காண வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

Similar News