ஆன்மிகம்

மரணப்படுக்கையில் இருப்பவருக்கு கங்கை நீர் கொடுக்க சொல்வது ஏன்?

Published On 2016-04-30 09:16 GMT   |   Update On 2016-04-30 09:16 GMT
மரணப்படுக்கையில் இருப்பவருக்கு கங்கை நீர் கொடுக்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவார்கள்.
குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது. பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். 'எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்' என்பதே அது. பத்தாம் நாள் போர் அன்று, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, 'சாஸ்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக' என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது. இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

கங்கை தீர்த்தம் கிடைக்காதவர்கள் கோவிலில் கிடைக்கும் தீர்த்ததை அல்லது துளசி கலந்த நீரை கொடுக்கலாம்.

Similar News