ஆன்மிகம்

உக்கிர மகா காளியம்மன் திருநடன உற்சவம்

Published On 2016-04-23 05:42 GMT   |   Update On 2016-04-23 05:42 GMT
தா.பழூர் அருகே கோடாலி கருப்பூரில் உக்கிர மகா காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோடாலிகருப்பூர் கிராமத்தில் உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருநடன உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழாகொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி துர்க்கையம்மன் மற்றும் உக்கிர மகா காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு வகையான மலர் அலங்காரத்துடன் துர்க்கையம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருநடன உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கோடாலி கருப்பூர் கிராமத்தில் தெற்குத்தெரு துவங்கி பல்வேறு முக்கிய வீதிகளில் உக்கிர மகா காளியம்மன் வேடமணிந்த ஒருவர் திரு நடனமாடினார்.

அப்போது கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தங்களது வீடு மற்றும் தெருக்களை சுத்தப்படுத்தி, கோலமிட்டு அம்மனை வரவேற்றனர். மேலும் பச்சரிசி மற்றும் வெல்லத்தால் தயார் செய்யப்பட்ட மாவிளக்கு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைபாக்கு என அர்ச்சனைப்பொருட்களை தட்டில் வைத்து பக்தியோடு அம்மனை வழிபட்டனர்.

அப்போது பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அம்மன் அருள்வாக்கு சொன்னார். விழாவில் கோடாலிகருப்பூர், வக்காரமாரி, சோழமாதேவி, அணைக்குடம், உதயநத்தம், கோடாலி, வடவார்தலைப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Similar News