சினிமா
மாணவர்களை கெஞ்ச வைத்து விட்டார்கள் - பா.இரஞ்சித்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை ‘மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்ற கெஞ்சும் நிலைக்கு வைத்து விட்டார்கள்’ என்று இயக்குனர் பா.இரஞ்சித் கூறியிருக்கிறார். #NEET #TamilnaduGovernment
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், ‘நீட்தேர்வு மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்ற கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய அரசும் அதன் நிழல் போல இருக்கும் மாநில அரசும் தான்!!’ என்று பதிவு செய்திருக்கிறார். #NEET #TamilnaduGovernment