சினிமா
எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி - கமல்
எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.
இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி டைட்டில் போட்டு இருந்தார். இந்த படத்தை கிழக்கு ஆப்ரிக்காவின் பின்னணியில் பிரமாண்டமாக தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தீவிர அரசியலில் இறங்கியதால், அந்த படம் தயாராகவில்லை.
எம்.ஜி.ஆரின் அந்த கனவை நிறைவேற்றும் வகையில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் அனிமேஷன் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரிகணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா ஆகியோர் தயாரிக்கிறார்கள். அருள் மூர்த்தி இயக்குகிறார்.
இந்த படத்தின் தொடக்கவிழா எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளில் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடந்தது. இதில் ரஜினி, கமல் இருவரும் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தனர். தற்போது தனித்தனியாக அரசியல் கட்சி தொடங்க இருக்கும் இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, லதா, ராஜஸ்ரீ, சங்கீதா, ஜெயமாலினி, அம்பிகா, ரோஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளான 17-1-2019-ல் ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ வெளியாகிறது.