சினிமா

எந்த கட்சியிலும் ரஜினி சேரமாட்டார்: அண்ணன் சத்தியநாராயணராவ் பேட்டி

Published On 2017-12-15 10:55 GMT   |   Update On 2017-12-15 10:55 GMT
ரஜினிகாந்த், பா.ஜ.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் சேரமாட்டார் என்று ஓசூரில் அவருடைய அண்ணன் சத்தியநாராயணராவ் நிருபர்களிடம் கூறினார்.
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நன்மைக்காக சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரஜினி எனக்கு தம்பியாக கிடைத்து இருப்பது நான் செய்த பாக்கியம்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர். அவர் அரசியலுக்கு வநதால் ஏழை-எளியோருக்கு நன்மைகளை செய்வார். அவர் சிறந்த ஆன்மீகவாதி. ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசியல் கட்சியினரால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரே அறிவிப்பை வெளியிடுவார். பா.ஜ.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் ரஜினி சேரமாட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூதாதையர்கள் வாழ்ந்த நாச்சிகுப்பம் கிராமத்திற்கு ரஜினிகாந்த் விரைவில் வர உள்ளார். அங்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை அவர் சந்திக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News