சினிமா

பெரியபாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி

Published On 2017-12-15 06:22 GMT   |   Update On 2017-12-15 06:22 GMT
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போல சமீபத்தில் தமிழக போலீஸ் அதிகாரி பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று.

அந்த படத்தில் தீரன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருப்பார். தமிழக போலீஸ் அதிகாரியான அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்வார். இவ்வாறாக படத்தில் நடந்தது போன்ற சம்பவம் ஒன்று நிஜத்தில் நடந்திருக்கிறது. 

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீர மரணமடைந்தார். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு காவல்துறையினர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெரிய பாண்டியனின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். 

Tags:    

Similar News