சினிமா

‘மெர்சல்’ வெற்றியை துபாயில் கொண்டாடிய விஜய் - அட்லீ

Published On 2017-11-14 09:41 GMT   |   Update On 2017-11-14 09:41 GMT
விஜய் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படத்தின் வெற்றியை நடிகர் விஜய், இயக்குநர் அட்லி உள்ளிட்ட படக்குழுவினர் துபாயில் கொண்டாடினர்.
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தென் இந்திய நடிகர்களில் அதிக வசூல் குவித்தது விஜய் படம் தான் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.



‘மெர்சல்’ படம் 25 நாட்களையும் கடந்து ரசிகர்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர் உள்பட அனைவரும் இந்த படத்தை வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் விடுமுறையை கொண்டாட சமீபத்தில் வெளிநாடு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய், ‘மெர்சல்’ பட இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்று இருந்தனர்.

துபாயில் உள்ள பாலம் தீவுக்கு சென்ற அவர்கள் ‘மெர்சல்’ பட வெற்றியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ‘மெர்சல்’ தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுவதையொட்டி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

Tags:    

Similar News