சினிமா

கலைஞர்கள் மது, மாது, புகைக்கு அடிமையாக கூடாது: சிவகுமார்

Published On 2017-10-25 10:35 GMT   |   Update On 2017-10-25 10:35 GMT
கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள் என்று நடிகர் சிவகுமார், நூல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
பாடலாசிரியரும் இயக்குனரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய நூல் ‘சகலகலா வல்லபன்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

“அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன். இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேசவைத்தேன். அப்படிப்பட்ட காலத்தில் பேசும் படத்தில் வல்லபன் இருந்தார். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்மினி, சாவித்ரி என்று வரையவைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார்.

அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன். கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள். ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்கு கடவுள் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.

இதை உலக அளவில் சொல்வேன். கலைஞர்களில் மறைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி பலருக்கும் புகை, மது, மாது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம். கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்” என்றார்.

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குனர்கள் சித்ராலெட்சுமணன், பேரரசு, கவிஞர் யுகபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் வரவேற்றார். அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.
Tags:    

Similar News