சினிமா

தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என போலீசில் புகார்

Published On 2017-10-06 07:03 GMT   |   Update On 2017-10-06 07:03 GMT
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, அவருடைய தந்தை என்று கூறும் கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினர், நடிகர் தனுஷை தங்களுடைய மூத்த மகன் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

கதிரேசன் மதுரை புதூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஜீவனாம்சம் கேட்டு மேலூர் நீதிமன்றத்தில் தனுஷ் மீது வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை ரத்து செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் எதிர்மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையின் போது எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி, தாயார் விஜயலட்சுமி ஆகியோருக்கு பிறந்ததாக பதிவு எண் இல்லாத சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர்.



அவர்கள் பிறப்பு சான்றிதழ் வழங்கிய தேதியன்று மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி தம்பதிக்கு குழந்தை பிறந்ததாக பதிவு இல்லை. அதே போன்று சென்னை மாநகராட்சி பதிவேட்டிலும் குழந்தை பிறந்ததற்கான எவ்வித பதிவும் இல்லை. ஆகவே இது போலிச் சான்றிதழ் என்பது தெரியவருகிறது.

மேலும் அந்த வழக்கில் ஆர்.கே.வெங்கடேச பிரபு, தகப்பனார் பெயர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆதிதிராவிடர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் பள்ளிச்சான்றிதழ் தாக்கல் செய்துள்ளனர். அதுவும் போலி சான்றிதழ் என்பது தெரியவந்துள்ளது. அதே போன்று தனுஷ் பிறந்த தேதி பற்றியும் தவறுதலான தகவல் கொடுத்து ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மேலும் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டதாக ஒரு போலி குடும்ப அட்டை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவை அனைத்தும் போலி சான்றிதழ்கள்.

எனவே தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News