சினிமா

ஹிருத்திக் ரோஷன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்: கங்கனா ரணாவத் புகார்

Published On 2017-09-06 06:59 GMT   |   Update On 2017-09-06 06:59 GMT
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்” என்று நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர், கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 3 தடவை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கி இருக்கிறார். இவர் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்து அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

“நானும், ஹிருத்திக் ரோஷனும் தீவிரமாக காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினேன். ஆனால் தனக்கு மனைவி இருப்பதை காரணமாக சொல்லி திருமணத்துக்கு அவர் மறுத்தார். வெளி உலகுக்கு தெரியாமல் காதலை நீடிக்கலாம் என்றும் கூறினார்.

நான், “திருமணம் செய்ய மறுத்தால் காதலிப்பது அர்த்தமற்றது” என்று சொல்லி விலகி விட்டேன். அதன்பிறகு என்னை ஒருநாள் தொடர்பு கொண்டு மனைவி சுசானேவை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறினார். விரைவில் விவாகரத்து கிடைத்து விடும் என்றும் அதன் பிறகு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். அதை நம்பி மீண்டும் அவரோடு நெருங்கி பழகினேன்.



ஆனால் அப்போது இன்னொரு நடிகையுடன் அவர் தொடர்பு வைத்து இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “என்னை மறந்து விடு” என்று சாதாரணமாக சொன்னார். அந்த தோல்வியில் இருந்து என்னால் வெளிவரமுடியாமல் தவித்தேன். அதன்பிறகு நான் நடித்த ‘குயின்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரவேற்பை பெற்றது.

அப்போது ஹிருத்திக் ரோஷன் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். மீண்டும் காதலை தொடரலாமா? என்று கேட்டேன். குயின் படம் ஜெயித்த தலைக்கனத்தில் பேசுகிறாயா’ என்று கோபித்துக்கொண்டார். அதன்பிறகுதான் ஹிருத்திக் ரோஷனுக்கும் எனக்கும் இருந்த காதலை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தினேன்.

இதனால் எனக்கு மிரட்டல்கள் வந்தன. “ஹிருத்திக் ரோஷன் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் குடும்பம் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று மிரட்டினார்கள். நான் ஹிருத்திக் ரோஷனுக்கு எழுதிய கடிதங்களையும் எனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள்.

இதுகுறித்து மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் கதியை எண்ணிப்பாருங்கள்.”

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
Tags:    

Similar News