சினிமா

ரஜினிகாந்தின் `காலா' படத்துக்கு தடை கேட்ட வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

Published On 2017-07-12 10:52 GMT   |   Update On 2017-07-12 10:52 GMT
ரஜினிகாந்தின் `காலா' படத்துக்கு தடை கேட்ட வழக்கு விசாரணையை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் என்ற நாகராஜா. இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்துள்ளேன். ‘கரிகாலன் என்ற தலைப்பு’ மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது ஆகும்.



என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

எனவே, என்னுடைய கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு 4-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதிலளிக்க ரஜினிகாந்த், ரஞ்சித் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கால அவகாசம் கேட்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News