சினிமா

கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் பேட்டி

Published On 2017-07-04 06:58 GMT   |   Update On 2017-07-04 06:58 GMT
தமிழக முதல்-அமைச்சரை தலைமை செயலகத்தில் நடிகர் விஷால் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் நம்பிக்கை அளித்ததாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு பெறுவது குறித்து விஷால் வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்து தற்போது உள்ள சூழ்நிலை குறித்து பேசினோம். ஜி.எஸ்.டி. வரி தவிர 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது குறித்தும், அதனை மறுபரிசீலனை செய்யும்படியும் பேசினோம்.

மாநில அரசிடம் இருந்து நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு முறை வந்துள்ளது. அதன்படி 50 சதவீதம் மாநில அரசுக்கு வரியாக கிடைக்கும். உள்ளாட்சிக்கான வரியை ரத்துசெய்ய வேண்டும் என கூறியுள்ளோம்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷ், ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறித்து கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம்.


மேலும் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளோம். தயாரிப்பாளர்களுக்கு அதிகளவிலான பளுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

பிற மாநிலங்களில் உள்ளது போல் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். ஒரே வரிவிதிப்பு முறையில் அதிக பட்ஜெட் கொண்ட படத்திற்கு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

கர்நாடகா, மேற்கு வங்காளம், தெலுங்கானாவில் வரியை மீண்டும் சினிமாத்துறைக்கு அளிக்கின்றனர். அதுபோல் எதுவும் நாங்கள் கேட்கவில்லை. கேளிக்கை வரிக்கான பிரச்சினைக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதனும் முதல்-அமைச்சரை சந்தித்து கேளிக்கை வரி குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசுத்துறை செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சினிமாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதுகுறித்து நல்ல முடிவு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News