சினிமா

ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா

Published On 2017-04-29 05:00 GMT   |   Update On 2017-04-29 05:00 GMT
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணிந்து நடிக்கக் கூடாது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள். உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள். இதை நான் நம்ப மாட்டேன். குடும்ப பாங்காக வரும் நடிகைகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம் கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து விட்டேன்.

எனவே ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது. திறமைகள்தான் அவர்களை உயர்த்தி விடும். டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்லும்போது கதாபாத்திரத்துக்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவேன்.

நடிகர் கார்த்தியுடன் ‘பையா’ படத்தில் நடித்தபோது இரண்டு மூன்று ஆடைகளுக்கு மேல் நான் அணியவில்லை. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த படம் நன்றாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களை தாண்டி விட்டது. இத்தனை வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது சாதாரண விஷயம் இல்லை.



தற்போது தமிழில் மூன்று படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் வந்து என் கதவை தட்டுகின்றன. இப்போது எனக்கு நிறைய பக்குவம் ஏற்பட்டு இருக்கிறது. கதைகளை நானே தேர்வு செய்கிறேன். உடைகள் விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருக்கிறேன். டைரக்டர்களும் அரைகுறை உடையில் என்னை கவர்ச்சியாக காட்ட முயன்றது இல்லை.

எல்லா தொழில்களிலும் பலன் கிடைக்காவிட்டால் அதை கசப்பான அனுபவமாக உணர்வார்கள். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இங்கு பலனை எதிர்பார்க்காமல் தொழிலை மட்டும் நேசிக்க வேண்டும். படங்கள் தோல்வி அடைந்தாலும் சிறப்பாக நடித்து இருந்ததால் பாராட்டுகள் கிடைக்கும். எனது ஒவ்வொரு படமும் சிறந்த படங்கள்தான்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.
Tags:    

Similar News