மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 04:39 GMT   |   Update On 2024-01-11 04:41 GMT

அச்சத்தை தவிர்த்தால் உச்சம் எட்டலாம் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதியாகவும் சனி இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனக்கவலைகள் மாறும். சுபச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும்.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். இதை அர்த்தாஷ்டம குரு என்று சொல்வது வழக்கம். குடும்பச்சுமை கொஞ்சம் கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் ஒருசில தடைகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் உருவாகும். குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம் என்பதால் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதியும் இந்த நேரத்தில் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். இருப்பினும் கவலைப்பட வேண்டாம். தைரியமும், தன்னம்பிக்கையும் கைகொடுக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். ஜென்ம ராசிக்கு புதன் வருகின்ற பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகர-செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். லாபாதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்ய நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு கேட்ட சலுகைகளை உயர் அதிகாரிகள் வழங்குவர். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ-மாணவியர்கள் அதிக ஈடுபாட்டுடன் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 15, 16, 19, 20, 31, பிப்ரவரி: 1, 3, 4, 5, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News