செய்திகள்

அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை-2 மகன்கள் கைது

Published On 2019-05-26 16:35 GMT   |   Update On 2019-05-26 16:35 GMT
அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை காந்திநகர், சர்க்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 54). விவசாயி. இவர் நேற்று அவருடைய தம்பி மோகன் (52), அவரது மகன் சுந்தரம்(24) ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில் வளர்ந்து இருந்த முள்செடி விறகுகளை வெட்டி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த விஜயகுமாரின் மற்றொரு தம்பி ராமன் (50). அவரது மகன்கள் சக்திவேல்(23), லட்சுமணன்(22) ஆகியோர் விஜயகுமாரிடம் நிலத்தை பங்கு பிரிக்கவில்லை.

அதற்குள் அதில் வளர்ந்துள்ள முள்செடி விறகுகளை எப்படி வெட்டலாம் என கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார், மோகன், சுந்தரம் ஆகியோரை இரும்பி கம்பியாலும், உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மோகன், சுந்தரம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீரஞ்சிவிலு ஆகியோர் வழக்குபதிவு செய்து ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News