அரசு ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனாலும் அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஒருவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். இங்கும் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கின்றனர். பணம் வாங்கியவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனையுடன் கூறினர்.