செய்திகள்

என் கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்- ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்

Published On 2019-02-18 10:59 GMT   |   Update On 2019-02-18 10:59 GMT
என் கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட் என பெயரெடுத்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை ராமநாதபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவில் இருந்து சென்னை காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.

இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளையும், டி.எஸ்.பி.க்களையும் இடமாற்றம் செய்து வருகிறார்.

ஏற்கனவே துணை கமி‌ஷனர்கள், இணை கமி‌ஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் மாற்றப்பட்ட நிலையில் இப்போது ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், என் கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட் என பெயரெடுத்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை ராமநாதபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவில் இருந்து சென்னை காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் உள்பட 26 ஏ.டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 உதவி கமி‌ஷனர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஆவடி உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், கோயம்பேடு உதவி கமி‌ஷனராக ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 89 டி.எஸ்.பி.க்களையும் பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் ஒரே இடத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யவும் பட்டியல் தயாராகி வருகிறது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்.
Tags:    

Similar News