search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்"

    • உத்தரபிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை குலைநடுங்க செய்யும் அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் சிங்கம் என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.
    • உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன.

    இந்திய அரசியல் களத்தில் பரபரப்பான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது உத்தர பிரதேசம். இந்த மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளில் பலர் கிரிமினல் குற்றம் புரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

    அதே நேரத்தில் அந்த மாநிலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகம். குறிப்பாக டெல்லிக்கு அருகில் உள்ள உத்தர பிரதேச மாநில காசியாபாத் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது எப்போதுமே மாநில காவல் துறைக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

    இப்படி தொடர்ச்சியாக அந்த மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றுவதுடன் கொலை உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் உத்தர பிரதேச அரசுக்கு இந்த மாவட்டத்தின் குற்றவாளிகளை அடக்குவது என்பது பெரும் தலைவலியாக இருந்தது.

    கடந்த ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு தலையெடுத்து குற்றவாளிகளின் கூட்டத்தை அடியோடு ஒடுக்கி இருக்கிறார்.

    அவரது பெயர் முனிராஜ். தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஆ பாப்பாரப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் 2019-ம் ஆண்டு உத்தர பிரதேச கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார் அங்கு பல்வேறு மாவட்டங்களில் அவர் பணியமர்த்தப்பட்டார். உளவுத்துறையில் அவர் பணியில் இருந்தபோது தான் கடந்த ஆண்டு காசியாபாத் மாவட்டத்தில் கடுமையான குற்றங்கள் நடைபெற்று வந்தன.

    அப்போது அங்கு போலீஸ் அதிகாரியாக இருந்த பவன்குமார் என்பவர் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அதிரடியாக அவர் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது தான் உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சரான யோகி ஆதித்ய நாத்தின் பார்வை முனிராஜின் மீது பலமாக விழுந்துள்ளது.

    முனிராஜ் இதுவரை பணியாற்றிய மாவட்டங்களில் சிறப்பாக பணி புரிந்ததையும் உளவு பிரிவில் அவர் நன்றாக பணியாற்றுவதையும் புள்ளி விவரங்களோடு தெரிந்துகொண்ட யோகி ஆதித்யநாத் மாவட்டத்திற்கு பொறுப்பு அதிகாரியாகவே எஸ்.பி. முனிராஜை நியமனம் செய்து உள்ளார்.

    இந்த பொறுப்பு பணியிலேயே முனிராஜ் கடுமையாக வேகம் காட்டினார். இதையடுத்து காசியாபாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் வேட்டையாடப்பட்டனர். அந்த வகையில் காசியாபாத்தில் முனிராஜ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் உத்தரபிரதேச மாநிலம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. அந்த மாநிலத்தில் இவரது பெயரை கேட்டாலே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள பயந்து நடுங்கும் நிலை உருவானது. இப்படி குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முனிராஜ் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் அறியப்பட்டார்.

    ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க வரும் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை அந்த வகையில் பல குற்றவாளிகளின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இப்படி பல குற்றவாளிகளை காலில் சுட்டு பிடித்த காவல்துறை அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இரண்டு ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க சென்றபோது அவர்களை எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

    இரண்டு குற்றவாளிகளும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் போலீசாரை தாக்க முற்பட்டபோது துப்பாக்கி குண்டுக்கு இரையானார்கள். இந்த என்கவுண்டர் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை குலைநடுங்க செய்யும் அதிகாரி முனிராஜ் அம்மாநிலத்தில் சிங்கம் என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.

    தற்போது உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. காசியாபாத்தில் இருந்து மாற்றப்பட்டு மிகவும் முக்கிய பகுதியாக விளங்கி வரும் அயோத்தியில் உயர் பதவியில் முனிராஜ் அமர்த்தப்பட்டுள்ளார்.

    தற்போது அங்கு பணிபுரிந்து வரும் அவர் விரைவில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரை அயோத்தியிலேயே பணியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ராமர் கோவில் விழாவை ஒரு மாதம் வரையில் நடத்த உத்தரபிரதேச அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமர் கோவில் விழாவை கோலாகலமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முனிராஜ் தான் சரியான தேர்வு என்று நினைத்து அவரை அங்கு பணியில் அமர்த்தியுள்ளார். அதற்கேற்ப போலீஸ் அதிகாரி முனிராஜும் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி முனிராஜ் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    காசியாபாத் மாவட்டத்தில் நான் பணியமர்த்தப்பட்டபோது அங்கு குற்ற செயல்கள் அதிகம் நடைபெற்று வந்தன. இதனால் ஆரம்பத்தில் குற்றவாளிகளை ஒடுக்குவது பெரும் சவாலாகவே இருந்தது. வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தோம்.

    இதன்பிறகு கிரிமினல்களையும் களையெடுக்க முடிவு செய்து அதன்படி திட்டமிட்டு செயல்பட்டோம். கடுமையான குற்றவாளிகள் 100 பேரை காலில் சுட்டு பிடித்தோம்.

    எப்போதுமே போலீஸ் மீது பயம் இருந்தால் மட்டுமே குற்றசெயல்கள் குறையும். அந்த வகையில் நானும் எனக்கு கீழ் பணிபுரிந்த காவல்துறையினரும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக குற்றசெயல்கள் காசியாபாத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டன. குறிப்பாக 20 கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த இரண்டு குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க சென்றபோது அவர்கள் தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர் செய்ய நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான எச்சரிக்கையாக அமைந்தது.

    இதன் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் போலீசாரை பார்த்து குற்ற செயல் ஈடுபடுபவர்கள் நடுங்கும் நிலையை ஏற்படுத்தினோம் கடந்த ஆண்டு இறுதியில் அயோத்தியில் பணி அமர்த்தப்பட்டு உள்ளேன் காவல்துறை பணியை சிரமமாக கருதாமல் கவனமுடன் சிறப்பாக மேற்கொண்டாலே போதும் குற்ற செயல்களை வெகுவாக குறைக்க முடியும்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி முனிராஜ் தெரிவித்தார்.

    வெளி மாநிலங்களில் இருந்து தமிழக கேடர் காவல்துறை அதிகாரிகளாக பணியில் சேர்ந்த பலர் தமிழகத்திலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி முனிராஜ் உத்தர பிரதேச மாநிலத்தை கலக்கி வருகிறார். அம்மாநிலத்தில் அவரைப்பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு தனது உழைப்பாலும் கடுமையான சிரத்தையான பணியாலும் காவல்துறை வட்டாரத்தில் சுறுசுறுப்பான திறமையான அதிகாரி என்ற பெயரையும் எடுத்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரி முனிராஜ் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பெயர் சொல்லும் வகையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ள போலீஸ் அதிகாரி முனிராஜ் உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டுமின்றி தனது சொந்த மாநிலமான தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

    ×