செய்திகள்
நிபா வைரஸ்: பினராயி விஜயன் நாளை உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை
கேரளாவில் வேகமாக பரவிவரும் நிபா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நாளை உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அம்மாநில மக்களிடையே நிபா காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், வேகமாக பரவிவரும் நிபா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
முன்னதாக நிபா வைரஸ் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "பொதுமக்கள் நிபா காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு நிபா காய்ச்சல் கேரளாவை தாக்கியபோது கடுமையாக போரிட்டு அதனை வென்றோம். அதேபோல் இப்போதும் விரட்டி அடிப்போம்” என்றார்.