செய்திகள்
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி
வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடியானது. #SamajwadiParty #TejBahadurYadav #VaranasiSPcandidate #nominationrejected
லக்னோ:
பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
முன்னதாக இதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த தேஜ் பகதூர் இரண்டாவது முறையாக சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தாக்கல் செய்த வேட்புமனுவில் சில முரண்பாடுகள் இருந்ததாக குறிப்பிட்ட வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரி, இது தொடர்பாக சில ஆவணங்களுடன் இன்று காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, தேஜ் பகதூர் தனது வழக்கறிஞர் மூலம் தேவையான ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தார். அவற்றை பரிசீலித்த அதிகாரி தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இன்று மாலை அறிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக தேஜ் பகதூர் தெரிவித்துள்ளார். #SamajwadiParty #TejBahadurYadav #VaranasiSPcandidate #nominationrejected