செய்திகள்

15ந்தேதி கேரளா வருகை- பத்மநாபசாமி கோவிலில் பிரதமர் மோடி சாமிதரிசனம்

Published On 2019-01-13 10:05 GMT   |   Update On 2019-01-13 10:05 GMT
கேரள மாநிலம் கொல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை திறப்புவிழாவில் கலந்து கொள்ள வருகிற 15-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி பத்மநாபசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். #PMModi
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்புவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொல்லம் புற வழிச்சாலையை திறந்து வைக்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 15-ந்தேதி புறப்படும் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைகிறார்.

விமான நிலையத்தில் வைத்து பிரதமருக்கு கேரள கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் செல்லும் பிரதமர், கொல்லம் புறவழிச்சாலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் பிரசித்திபெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு செல்கிறார்.

இரவு 7.20 மணிக்கு பத்மநாபசாமி கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெறும் எளிமையான நிகழ்ச்சியில் ‘சுதேசிதர்சன்’ என்ற திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர், கேரள மந்திரிகள் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு பத்மநாபசாமி கோவில் சென்று அவர் சாமி தரிசனம் செய்கிறார். 7.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமானம் நிலையம் செல்லும் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #PMModi #ModiKeralaVisit
Tags:    

Similar News