செய்திகள்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிமுக பக்கம் திரும்ப வாய்ப்பு

Published On 2019-05-25 07:11 GMT   |   Update On 2019-05-25 07:11 GMT
தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

என்றாலும் 9 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. எனவே ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.


சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைவரும் தன்னலமின்றி கட்சியில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று அழைப்பு விடுத்து இருந்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.

எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News