செய்திகள்

குரும்பாபேட்டில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-05-05 11:42 GMT   |   Update On 2019-05-05 11:42 GMT
குரும்பாபேட்டில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையத்தை அடுத்த குரும்பாபேட் மாரியம்மன் கோவில் பின்பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது50), கட்டிட தொழிலாளி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மதுகுடிக்கும் பழக்கம் உள்ள வெங்கடேசன் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் வள்ளி தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து குடும்பத்தை நடத்தி வந்தார். மேலும் தாய்க்கு உதவியாக அவரது மகன் யோகேஸ்வரனும் (22) வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் சம்பாதித்த பணத்தை மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை மனைவி வள்ளி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் காலை வழக்கம்போல் வள்ளியும், அவரது மகன் யோகேஸ்வரனும் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளி விடுமுறையையொட்டி மகள் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வெங்கடேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டு ஜன்னலில் அவர் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கினார்.

இதனை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்து யோகேஸ்வரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து யோகேஸ்வரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது அதற்குள் வெங்கடேசன் இறந்து விட்டார்.

இதுகுறித்து யோகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஏட்டு சங்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News