செய்திகள்

சோமங்கலம் அருகே விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு மாணவர் பலி

Published On 2019-01-21 07:12 GMT   |   Update On 2019-01-21 07:12 GMT
சோமங்கலம் அருகே விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). கல்லூரி மாணவர்.

இவர் உடன் படிக்கும் நண்பர்களான படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரதாபன் (18) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சோமங்கலம் அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ், பிரதாபன் ஆகியோர் பலியானார்கள். ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இதில் விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சோமங்கலம், மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த அண்ணன்- தம்பியான சஞ்சய்குமார் (19). சதீஷ் (17) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சஞ்சய்குமார் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

காயம் அடைந்த சதீஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான சஞ்சய்குமார், தனது தம்பியுடன் உறவினர் திருமண பத்திரிக்கை கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கிக் கொண்டார்.

இந்த விபத்து வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி விசாரணை நடத்தினார். நேற்று இரவு அவர் பணி முடிந்து காஞ்சீபுரத்தில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வேடல் அருகே சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி படுகாயம் அடைந்தார். அவருக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News