செய்திகள்

வாகனம் மோதி விபத்து - பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி

Published On 2019-01-19 18:05 GMT   |   Update On 2019-01-19 18:05 GMT
அரவக்குறிச்சி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்தவர் புபேந்தர். இவரது மனைவி செல்வி (வயது 27). அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகள் ஹரிப்பிரியா (18). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

இதையடுத்து வெங்கமேட்டில் இருந்து பாதயாத்திரை குழுவினருடன் செல்வி, ஹரிப்பிரியா பழனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அரவக்குறிச்சி அருகே கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சித்தப்பட்டி காலனி பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, செல்வி, ஹரிப்பிரியா மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிப்பிரியா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஹரிப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News