செய்திகள்

கும்பகோணத்தில் வாய்க்காலில் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2019-01-09 09:12 GMT   |   Update On 2019-01-09 09:12 GMT
கும்பகோணத்தில் வாய்க்காலில் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவர தெருவை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 32). இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் பாலகிருஷ்ணன் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது கும்பகோணம் உள்ளூர் வாய்க்கால் அருகே சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்தது. இதனால் அவர் வாய்க்காலில் அருகே சைக்கிளுடன் திடீரென தவறி விழுந்தார்.

இதில் சைக்கிளுடன் வாய்க்கால் தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சிறிதுநேரத்தில் மூழ்கி பலியானார்.

இன்று காலையில் வாய்க்காலில் பாலகிருஷ்ணன் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வாய்க்காலில் மிதந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலியான பாலகிருஷ்ணனுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News