செய்திகள்

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2018-04-25 11:56 GMT   |   Update On 2018-04-25 11:56 GMT
5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணையை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 20), கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி, 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர், சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி அழுதபடி தனது பெற்றோரிடம் கூறினாள். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாமலையை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

இதுதொடர்பான விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரித்தார். நேற்று அவர் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி சென்றதற்காக ஓராண்டு சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் பலாத்கார நோக்கத்தோடு சிறுமியை அழைத்து சென்றதற்காக 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அண்ணாமலைக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பலத்த காவலுடன் அண்ணாமலை அழைத்து செல்லப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News