ஆன்மிகம்
புலிவலம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-04 05:02 GMT   |   Update On 2019-06-04 05:02 GMT
புலிவலம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திட்டக்குடி அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் கோவில்கள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து தினசரி அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. கடந்த 1-ந்தேதி பெண்கள் மாரியம்மன் மற்றும் காத்தவராயன் சாமிகளுக்கு ஊரணி பொங்கலிட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து கோவிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. முன்னதாக பக்தர்கள் பால் குடம் சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புலிவலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News