search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவான்மியூர் தல புராணப் பெருமைகள்
    X

    திருவான்மியூர் தல புராணப் பெருமைகள்

    • தென்கிழக்கு கடற்கரை ஓரத்தில் திருவான்மியூர் மையப்பகுதியில் திருக்கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது.
    • மண்டபத்தின் கிழக்கு பகுதியில் பஞ்சலிங்கங்களும் உண்டு.

    திருவான்மியூர் தலத்திற்கு இன்னும் நிறைய புராணப் பெருமைகள் உண்டு.

    * காசிப முனிவரின் சாபத்தால் அவதியுற்ற காமதேனு இத்தல இறைவனை பால்சொரிந்து பூஜித்து சாப நிவர்த்தி அமைந்தது. இதனால் இத்தல இறைவன் பால்வண்ண நாதராய் அருள்பாலிக்கிறார்.

    * வேதங்களும், இரட்சசு என்ற வானரன், பாரத போர் முடித்த பார்த்தசாரதி, சந்திரன், இந்திரன், இயமன், ஸ்ரீ ராமன் ஆகியோரும் இத்தல இறைவனை பூஜித்ததாக புராண செய்திகள் கூறுகின்றன.

    * பூமியை சமன் செய்ய வேண்டி தென்திசை வந்த அகத்தியரின் வயிற்றுவலி நீங்க இறைவன் இறைவியோடு காட்சி தந்துமருத்துவ சிகிச்சை முறைகளை அவருக்கு உபதேசித்தருளியதால் மருந்தீசர் என்ற பெயரும், வேதங்கள் பூஜித்தமையால் வேதபுரீசுவரர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.

    மருந்தீசர் என்றும், பால் வண்ண நாதர் என்றும் ஈசன் அருள்பாலிக்கும் இத்தலத்தின் விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது.

    இறைவனின் சிரசில் உள்ள கங்கையில் இருந்து சிதறிய ஐந்து துளிகளாய் கருதப்படும் ஜென்ம நாசினி, காம நாசினி, பாப நாசினி, ஞானதாயினி, மோட்ச தாயினி என ஐந்து தீர்த்தங்கள் இத்தலத்தில் உண்டு.

    தென்கிழக்கு கடற்கரை ஓரத்தில் திருவான்மியூர் மையப்பகுதியில் திருக்கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது.

    கிழக்கு மேற்கு இரு வாயில்களில் ஐந்து நிலை கோபுரங்கள் வணன் சுதை சிற்பங்கள் தாங்கி மிகவும் பொலிவுடன் காட்சி தருகிறது.

    கிழக்கு கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் விஜய கணபதியை தரிசிக்கலாம். அதற்கடுத்து முருகப்பெருமானின் தனிச்சன்னதி முன் மண்டபத்தோடு உள்ளது.

    தியாகர் சன்னதி உள்ள தியாகராஜர் சபா மண்டபத்தில் தியாகராஜர், அம்மன், தனியம்மன் ஆகிய உற்சவ விக்கிரகங்கள் உள்ளன.

    இச்சன்னதியின் முன்புறம் வலப்பகுதியில் கமல விநாயகரும் அருகே உள்ள தூண்களில் அனுமனும் அவருக்கு எதிராக தண்டாயுதபாணியும் காட்சி தருகின்றனர்.

    இம்மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக மருந்தீசுவரர் சன்னதி உள்ள மண்டபத்தை அடையலாம். கருவறையில் அருள்மிகு மருந்தீசர் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.

    மண்டபத்தின் தெற்கு பகுதியில் விநாயகருடன் தொடங்கி நாயன்மார்களும் தொகையடியார்களும் முறையாக வரிசையாய் இடம்பெற்றுள்ளனர்.

    இதனை அடுத்து வீருபாகு, அருணகிரிநார் ஆகியோர் இருபுறமும் இருக்க தேவியரோடு முத்துக்குமார சுவாமி காட்சி தருகிறார். வடக்கில் உற்சவ திருமேனிகள் பொலிவுடன் தரிசனம் தருகின்றனர்.

    அடுத்த சபையில் நடராஜர் சிவகாமி அன்னையுடன் தரிசனம் தருகிறார். இதையடுத்து 108 சிவலிங்கங்கள் 12 வரிசையில் அமையப்பெற்றுள்ளன.

    இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சி தருகிறார்.

    மண்டபத்தின் கிழக்கு பகுதியில் பஞ்சலிங்கங்களும் உண்டு.

    இது தவிர துர்க்கை நான்முகன், திருமால், சூரியபகவான், தட்சிணாமூர்த்தி, நாத்தன விநாயகர் ஆகியோரையும் இங்கு தரிசனம் செய்யலாம்.

    சுவாமி சன்னத்யை வலம் வந்த பின், தியாகர் மண்டபம் வழியாக வெளிவந்து கொடி மரத்தை சுற்றி வலம் வந்து

    தலவிருட்சம் தரிசனம் கண்டபின்னர் அம்பாள் சன்னதியை அடையலாம். அழகிய சிற்பங்களோடு வெளி மண்டபம்

    மிளிர உள்ளே கருவறையில் அருள்மிகு திரிபுர சுந்தரி நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி

    தருகிறாள் அம்மன் சன்னதியிலுள்ள ஸ்ரீ சக்கரமேரு தரிசனம் கோடி பாவங்கள் தீர்க்கவல்லது.

    தருமமிகு சென்னையில் அடையாறில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தின் புராணப் பொருமைகளை போன்ற திருவிழா சிறப்புக்களும் புகழ் பெற்றவை.

    திருக்கோவில் பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி வழிபாடுகளோடு சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது.

    காமிக ஆகமப்படி பூஜைகள் காணும் இத்தல இறைவனை வந்து தரிசித்தால் உடற்பிணியோடு உள்ள பிரியும் தொலைந்து பேரருள் கிடைக்கும்.

    Next Story
    ×