search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாய்ந்து வந்து தாக்கிய மலைச்சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்
    X

    பாய்ந்து வந்து தாக்கிய மலைச்சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

    அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றுள்ளார். #USmanKilledLion
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  

    இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த திங்கள் அன்று  காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக வாலிபர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. அது 80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும்.

    சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். அந்த வாலிபரின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர்.

    கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பின்னர், லாரிமர் கவுன்டியின் இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது.

    வடஅமெரிக்காவில் விலங்குகள் தாக்குதலில் உயிரிழப்பது மிகவும் குறைவு. கடந்த நூறு ஆண்டுகளில் 10க்கும் குறைவான நபர்களே விலங்குகளின் தாக்குதலில் இறந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #USManKilledLion

    Next Story
    ×