search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
    X

    நாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

    அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார். #NASA #SunitaWilliams #SpaceCraft
    நியூயார்க்:

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இதற்கிடையில், பூமியை தவிர இதரசில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.


    அவ்வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தகரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.

    நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’  மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’  என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஜோஷ் கஸ்ஸாடா ( 45 ), சுனிதா வில்லியம்ஸ் ( 52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), கிறிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் இதில் பயணிக்க உள்ளனர்.



    அமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும்.

    மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு  தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #NASA #SunitaWilliams #SpaceCraft
    Next Story
    ×