search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் சொத்து தகராறில்  தம்பி சுட்டுக்கொலை - திமுக நிர்வாகி வெறிச்செயல்
    X

    தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை - திமுக நிர்வாகி வெறிச்செயல்

    தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை அண்ணனே சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiMurder

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன்கள் கிளவின்டன், பில்லா ஜெகன் (வயது43), சிமன்சன்(38), சுமன்.

    பில்லா ஜெகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவராகவும் உள்ளார். மேலும் தூத்துக்குடி புறவழிச் சாலையில் லாரி செட் , நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் நடத்தி வருகிறார்.

    அவருடன் அவரது சகோதரர்களும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பில்லா ஜெகனின் சகோதரர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.அவர்கள் அனைவரும்ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சிமன்சனுக்குகடந்த 2016-ம் ஆண்டு மணப்பாட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    பில்லா ஜெகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பில்லா ஜெகனின் மகளை அதே பகுதியை சேர்ந்த சச்சின் என்பவர் காதலித்து வந்தாராம். இதையடுத்து சச்சின் காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் பில்லா ஜெகன் மட்டுமின்றி அவரது சகோதரர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பில்லா ஜெகனுக்கும், சிமன்சனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையால் சிமன்சனின் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நேற்று பிற்பகலில் சிமன்சன் தனது மனைவியை சமரசம் செய்து அழைத்து வர மணப்பாடு சென்றார். அதன் பிறகு இரவு வீட்டிற்கு வந்த சிமன்சன், தனது அண்ணனிடம் லாரி தொழிலில் பங்கு தருமாறு கேட்டார். அதற்கு பில்லா ஜெகன் மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பில்லா ஜெகனின் மற்ற சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றிரவு வெகு நேரம் வரை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் பில்லா ஜெகனுக்கும், சிமன்சனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிமன்சனை சுட்டார். இதில் அவரது தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. உயிருக்கு போராடிய சிமன்சனை அவரது நண்பர்கள் புதியம் புத்தூரை சேர்ந்த மாரீஸ், நாராயணன் ஆகியோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் சிமன்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிமன்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (வடபாகம்), ஜெயபிரகாஷ் (மத்திய பாகம்) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் சிமன்சனை துப்பாக்கியால் சுட்டதுமே பில்லா ஜெகன் தனது வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார்.

    தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று பில்லா ஜெகனை தேடி வருகின்றனர். இதனிடையே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் சிமன்சனின் மனைவி சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதார். #ThoothukudiMurder

    Next Story
    ×