search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் விராலிமலையில் நாளை  ஜல்லிக்கட்டு போட்டி
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் விராலிமலையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை 20-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும். அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு காரும்(சிப்ட்), 25 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புல்லட்(இரண்டு சக்கர ) வாகனமும், கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.

    இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்று போட்டியை ஆய்வு செய்கின்றனர்.

    போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற முன்னணி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. சுமார் 2500 காளைமாடுகள் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    நாளை நடைபெற இருக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    விராலிமலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட உள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #Jallikattu #Jallikattu2019
    Next Story
    ×