search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிஜா
    X
    கிரிஜா

    திருமணத்திற்கு மறுப்பு: ஆசிட் வீச்சில் காயமடைந்த விதவை பெண் கவலைக்கிடம்

    திருவட்டார் அருகே கள்ளக்காதலன் ஆசிட் வீசியதால் பலத்த காயமடைந்த விதவை பெண் மீது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    திருவட்டார்:

    குமரி மேற்கு மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஏற்றக்கோடு பரையன் கோணத்து விளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கிரிஜாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் இறந்து போனார். இதனால் கிரிஜா, தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்தார்.

    கிரிஜாவின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜான் ரோஸ் என்பவருடன் கிரிஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

    கணவர் இறந்த பின்பு, கிரிஜாவுக்கு, ஜான் ரோஸ் மிகவும் உதவியாக இருந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ஜான் ரோஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரிஜாவிடம் கூறினார்.

    அதற்கு கிரிஜா, குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டனர். அவர்கள் பெண் குழந்தைகள் என்பதால், இனி நான் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது. உறவினர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறினார். திருமணத்திற்கும் மறுத்து விட்டார்.

    கிரிஜா மீதான மோகத்தில் இருந்த ஜான் ரோசுக்கு அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் அடிக்கடி கிரிஜாவை சந்தித்து திருமண ஆசையை நிறைவேற்றும்படி தொந்தரவு கொடுத்தார். இதில் வெறுப்படைந்த கிரிஜா, சில மாதங்களுக்கு முன்பு ஜான் ரோஸ் பற்றி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, ஜான் ரோசையும் எச்சரித்து அனுப்பினர்.

    போலீசாரின் எச்சரிக்கைக்கு பிறகு சில நாட்கள் கிரிஜாவை சந்திக்காமல் இருந்த ஜான் ரோஸ் நேற்று முன்தினம் கிரிஜாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைகளும் இருந்தனர். அவர்களோடு ஜான் ரோஸ் பேசிக்கொண்டிருந்தார்.

    குழந்தைகள் வெளியே சென்ற பின்பு, தனியாக இருந்த கிரிஜாவிடம் , ஜான் ரோஸ் மீண்டும் திருமண பேச்சை எடுத்தார். இதை கேட்டதும் எரிச்சலடைந்த கிரிஜா, ஜான் ரோசை திட்டியதோடு, அவரை வெளியே போகும்படி எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான் ரோஸ், ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட்டை கிரிஜா மீது வீசினார்.

    கிரிஜாவின் முகம், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஆசிட் பட்டு எரிந்தது. கிரிஜா வலியால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஜான் ரோஸ் அங்கிருந்து தப்பியோடினார்.

    அக்கம் பக்கத்தினர் கிரிஜாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரிஜாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிரிஜா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய ஜான் ரோஸ் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அங்கு அவர் வி‌ஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஜான் ரோசின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான் ரோஸ் உடல் பிரேத பரிசோதனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    தற்கொலை செய்த ஜான் ரோஸ் உடல் கிடந்த இடத்தில் அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய பொருள்கள் கிடந்தன. அவற்றை போலீசார் கண்டெடுத்தனர்.

    அதே நேரம் ஜான் ரோஸ் பயன்படுத்திய செல்போனை காணவில்லை. அது மாயமாகி இருந்தது. அந்த செல்போனில் அவரும், கிரிஜாவும் எடுத்து கொண்ட பல்வேறு படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் தொடர்பான பல தகவல்களையும் அதில் ஜான் ரோஸ் பதிவு செய்து வைத்திருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே அந்த செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக திருவட்டார் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் ஜான் ரோஸ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

    ஜான் ரோசின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×