search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டாள்
    X
    ஆண்டாள்

    மது குடித்து வந்து கொலைமிரட்டல் விடுத்த மருமகனை எரித்து கொன்ற கொன்ற மாமியார்

    மது குடித்து வந்து கொலைமிரட்டல் விடுத்த மருமகனை மாமியாரே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது36). கொத்தனார். இவருக்கும், சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆண்டாள் மகள் ரம்யாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்மஸ்ரீ(4) என்ற பெண் குழந்தை உள்ளது. கணேசனுக்கும், ரம்யாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் ரம்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கொள்ளிடம் போலீசில் ரம்யாவின் தாயார் ஆண்டாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன், சட்டநாதபுரம் திருமுருகன் காலனியில் உள்ள தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு அடிக்கடி மது குடித்து விட்டு சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்றும் ஆண்டாள் வீட்டிற்கு குடித்துவிட்டு கணேசன் வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து கணேசனின் தந்தை ராஜேந்திரன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சட்டநாதபுரம் வி.ஏ.ஓ.விடம் சென்று ஆண்டாள் தனது உயிருக்கு கணேசனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து சம்பவத்தன்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறி சரணடைந்தார்.

    இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகள் ரம்யா தூக்கு மாட்டி இறந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணேசன் குடித்து விட்டு வந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும். நேற்று இரவு குடிபோதையில் வந்த கணேசன் பெட்ரோல் மற்றும் கத்தியை எடுத்துவந்து என்னை அடித்து துன்புறுத்தியதோடு என்னையும், எனது பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனால் பயந்து போன நான் போதையில் மயங்கி கிடந்த கணேசன் மீது அதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு பேத்தியுடன் தப்பிசென்று விட்டேன் என கூறினார்.

    மருமகனை மாமியாரே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×