search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் சரிவு

    மழை குறைந்ததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கும் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஏரி நிரம்பி வழிந்தது. ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக இருந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்ட் 11-ல் இருந்தும், விவசாய பாசனத்துக்கு ஆகஸ்ட் 26-ந்தேதியில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. 46.80 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    வீராணம் ஏரிக்கு இன்று வடவாறு வழியாக 722 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.45 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 44.65 அடியாக உள்ளது. இருப்பினும் சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்படுகிறது. விவசாய பாசனத்துக்கு 90 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கும். தொடர்ந்து இதேப்போல் நீர்மட்டம் குறைந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிகிறது. ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #VeeranamLake
    Next Story
    ×