search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் தலைமை ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
    X

    பெரம்பலூரில் தலைமை ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

    பெரம்பலூரில் தலைமை ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு போனது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கமலாதேவி (வயது 52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். கமலாதேவி பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கணவர் சந்திரசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், கமலாதேவி தான் பணிபுரியும் பள்ளி அருகே உள்ள கட்டிடத்தின் முதல்தளத்தில் வாடகைக்கு தனியாக வசித்து வருகிறார்.



    இந்த நிலையில் கமலாதேவி நேற்று முன்தினம் காலை வீட்டிலும், மதியம் பள்ளியிலும் ஆயுத பூஜையை முடித்து விட்டு, தொடர் பள்ளி விடுமுறையினால் திருச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை கமலாதேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதே கட்டிடத்தில் தரைத்தளத்தில் குழந்தைகளுக்கான உணவு பொருட் களை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யும் துரைராஜ்(41) என்பவரின் கடையின் வெளிப்பக்க பூட்டும் உடைக்கப்பட்டு, கடைக்கு உள்ளே நுழைவு வாயிற் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினர் இதுகுறித்து கமலா தேவிக்கும், துரைராஜுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிபோய் திருச்சியில் இருந்து உடனடியாக கமலாதேவி புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். இதைபோல் துரைராஜும் கடைக்கு வந்தார். கமலாதேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டும், அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து கமலாதேவி அதிர்ச்சி அடைந்தார். லாக்கரில் இருந்த ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்கள் வைத் திருந்ததாகவும், அவைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    தரைத்தளத்தில் உள்ள கடையில் ஏதும் திருட்டு போகவில்லை. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கமலாதேவி தொடர் பள்ளி விடுமுறையினால் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவின் லாக்கரை கம்பியால் நெம்பி, அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், ரொக்கத்தை திருடி சென்றுள்ளதாகவும், தரைத்தளத்தில் உள்ள கடையில் பணம் ஏதும் வைக்கப் படாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×