search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
    X

    சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

    சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனையின் போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChepaukStadium #CSKvsMI
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 7 லீக் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் 5 போட்டிகள் முடிந்து விட்டன.

    6-வது ஐ.பி.எல். லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. குறைந்த டிக்கெட் ரூ.1300. இந்த டிக்கெட்டை வாங்குவதற்கு இன்று காலையிலேயே ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களிடையே நெரிசல் ஏற்படாமல் இருக்க சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்தனர். இதில் தடுப்பு கட்டைகள் முறிந்து விழுந்தது. இதனால் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் போலீசார் அவர்களை தள்ளி விட்டனர்.

    ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தள்ளி விட்டனர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை.

    இதற்கிடையில் சாலையிலும் ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தும் கலையவில்லை. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

    இதனால் சேப்பாக்கம் ஸ்டேடியம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. #ChepaukStadium #CSKvsMI
    Next Story
    ×