search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன்கள் அரைசதம்- 201/4
    X

    பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன்கள் அரைசதம்- 201/4

    பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர். அதன்பின் இந்தியா அபாரமாக பந்து வீச விரைவாக நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. #AUSvIND
    பெர்த்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. புதிதாக கட்டப்பட்ட இம்மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்திய அணியில் காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்குப் பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் இடம் பிடித்தனர். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    வேகம் மற்றும் பவுன்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்ட ஆப்டஸ் மைதானம் முதலில் அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியா தொடக்க ஜோடி இந்திய வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. முதலில் பொறுமையாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் - ஹாரிஸ் ஜோடி பின்னர் வேகத்தை அதிகரித்தது. இந்தியாவின் 4 வேகப்பந்து வீச்சாளர்களையும் திறம்பட சமாளித்து பவுண்டரிகளாக அடித்தனர். இதனால் அந்த அணியின் ரன் வேகம் கூடியது.

    முகமது ஷமி பந்தில் ஆரோன் பிஞ்சிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கேட்கப்பட்டது. நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்தியா டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தியது. ஆனால் பந்து ஸ்டம்பை தாக்கவில்லை என்பது தெரிந்தது. இதனால் இந்தியா டி.ஆர்.எஸ். முறையில் ஒரு வாய்ப்பை இழந்தது. அடுத்த பந்திலும் எல்டபிள்யூ கேட்டார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பந்து ஸ்டம்பை தாக்கினாலும் நடுவர் முடிவு என்பது ரீபிளே-யில் தெரியவந்தது. இதனால் இந்தியா டிஆர்எஸ் கேட்டிருந்தாலும் பலன் இருந்திருக்காது.

    மதிய உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 26 ஓவரில் 66 ரன் எடுத்து இருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 36 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதன்பின் ஆரோன் பிஞ்சும் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 112 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.



    அதன்பின் வந்த உஸ்மான் கவாஜாவை 5 ரன்னில் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். சிறப்பாக விளையாடிய ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஹனுமா விஹாரி பந்தில் வெளியேறினார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. ஷேன் மார்ஷ் 8 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தேனீர் இடைவேளைக்குப்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா 69 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது,
    Next Story
    ×